21/04/2012

மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.

( தற்போது அக்குபங்சர் மருத்துவராக இருக்கும் ஹீலர்.அ.உமர் பாரூக் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலில் பட்டயம் பெற்றவர். சார்பு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ரத்தவியல் துறையில் பணியாற்றியவர். )

( புதுவையில் இருந்து வெளிவரும் ”நற்றிணை” இதழில் (ஏப்ரல் 2012) வெளிவந்தது ) 


மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த மருத்துவ ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை நம்பியே நம் சிகிச்சைகள் அனைத்தும் அமைந்துள்ளன. இப்படி அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்பினால் அச்சம் வருவது இயல்புதான்.

நம் உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதில் துவங்கி, என்னென்ன நோய்கள் நம் உடலில் குடியிருந்து கொண்டிருக்கின்றன, எந்தெந்த உறுப்புகளை அறுவை சிகிச்சையில் நீக்கலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் நம்புவது இந்த மருத்துவ ஆய்வுகளைத்தான். கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு. ஆனால் டெஸ்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு நம் நம்பிக்கை பெற்ற ஒன்றாக இந்த நூற்றாண்டில் ஆய்வுக்கூடங்கள் விளங்குகின்றன.

நாம் ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு முன்னால் மருத்துவத் துறையின் அறிவுசார் நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு கண்டுபிடிப்பு நிரூபிக்கப்பட்ட பின்னால் பல வருடங்கள் கழித்து அது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அடிப்படை அறிவியலின் வழியில் தவறான ஆய்வுகள் திருத்திக் கொள்ளப்படும். இது அறிவியல் துறைகளுக்கான பொது விதியாகும். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் .. மருத்துவத்துறையில் இன்று இது நிகழ்கிறதா? போன நூற்றாண்டு வரை மாற்றங்களுக்கு உட்பட்ட மருத்துவ அறிவியல் இன்று எதிர்க்குரலற்று ஒற்றைப் பாதையில் கேள்விகளில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் பாஸ்டியர் ரத்த வெள்ளை அணுக்கள் உயிரற்றவை என்று கண்டுபிடித்தார். இன்று நாம் அதை நம்புகிறோமா? மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டிஸ் மனித மூளை சளியால் ஆனது என்று அறிவித்தார். இன்றும் அப்படியேதான் நாம் கூறிக் கொண்டிருக்கிறோமா? வெள்ளை அணுக்கள் உயிருள்ளவை என்பது மட்டுமல்ல அவை எதிப்பு சக்தியின் அடிப்படை என்பதையும், மூளை நரம்பு மண்டலத்தின் தொகுப்பு என்பதையும் நவீன மருத்துவ அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துவிட்டார்களல்லவா? அப்படி எதிர் கேள்விகளில் இருந்துதான் மருத்துவ அறிவியல் தன்னை தகவமைத்து வந்திருக்கிறது என்பது வரலாறு. ஆனால் இன்றைய மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாற்றான குரல்களை அறிவியலுக்கு எதிராகப் புரிந்து கொள்வதால் அப்படியான குரல்கள் அங்கீகாரம் பெறவில்லை. மாற்று ஆய்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

சரி. மறுபடியும் நாம் துவங்கிய இடத்திற்கே வருவோம். மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா? இதற்கு நேரடியாக பதில் கூறுவதாக இருந்தால் - மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லாது. ஆனால் அவை கூறுவது சிகிச்சைக்குப் பயன்படாது. உடலின் முழுமைத் தன்மையை ஆய்வு முடிவுகளால் தரவே முடியாது.

நாம் இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்வோம். கழிவுகளில் செய்யப்படும் டெஸ்டுகள். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் டெஸ்ட்டுகளைப் பார்ப்போம்.

நம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன? இந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும், மலக்குடலின் வழியாக மலமும், நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப் பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.

உதாரணமாக நம் ரத்தத்தில் பத்து புழுக்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். (பயப்பட வேண்டாம் அப்படியெல்லாம் இருக்காது. சும்மா புரிவதற்காக). ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற வேண்டிய வேலை சிறுநீரகத்திற்கும், கல்லீரலுக்கும் இருக்கிறது. நம் ரத்தத்தில் இருக்கும் இந்தப் புழுக்களை வெளியேற்றுவதுதானே உடலிற்கு நல்லது? நம் கழிவு நீக்க உறுப்புக்கள் இந்தப் புழுக்களை அடையாளம் கண்டு கழிவுகளாக வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரின் வழியாக இரண்டு புழுக்கள் வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு உடலில் இருந்து புழுக்கள் வெளியேற்றப்படுவது நன்மையானது என்பதில் எதுவும் சந்தேகம் இல்லையே? அல்லது புழுக்களை உள்ளேயே வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறதா? கழிவு நீக்க உறுப்புக்களால் கழிவுகள் அடையாளம் காணப்பட்டு அவைகள் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றவை அனைத்தும் கழிவுகளே.

இப்போது இரண்டு புழுக்கள் சிறுநீரின் வழியாக வெளியேறுகிறது. ஒரு ஆய்வுக்கூட நிபுணர் இதைப் பார்த்து விட்டு கூறுகிறார் – உங்கள் சிறுநீரில் இரண்டு புழுக்கள் இருக்கின்றன. எனவே உங்கள் ரத்தத்தில் இரண்டு புழுக்கள் இருக்கும்” என்று. இது சரியாக இருக்கிறதா? இல்லை. ஏனென்றால் ரத்தத்தில் எவ்வளவு புழுக்கள் இருக்கும் என்பதை சிறுநீரில் வெளிவந்த புழுக்களை வைத்துச் சொல்ல முடியுமா? இப்படித்தான் நம்முடைய ஆய்வுக்கூடங்கள் நம் சிறுநீரைப் பரிசோதித்து கருத்துச் சொல்கின்றன. உங்கள் சிறுநீரில் இரண்டு ப்ளஸ் சர்க்கரை இருக்கிறது. அதனால் அதே அளவு சர்க்கரை உங்கள் ரத்தத்தில் இருக்கும் என்று. இவ்வாறு மலம், சிறுநீர், சளி என்று கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் இவ்விதமாகவே முடிவுகளை வெளியிடுகின்றன.

ஒருவருக்கு ரத்தத்தில் உப்பு மூன்று ப்ளஸ்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவருடைய சிறுநீரகங்களின் வேலை என்ன? ரத்தத்தில் கழிவாக உள்ள அளவுக்கு அதிகமான உப்பை பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது. அப்படி வெளியேற்றப்படும் சிறுநீரில் மூன்று ப்ளஸ் உப்பு இருந்தால் அவர் ரத்தத்தில் எவ்வளவு இருக்கும்? ஆய்வுக்கூடங்கள் கூறுகின்றன மூன்று ப்ளஸ் அப்படியே இருக்கும் என்று. உள்ளிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் போது உடலில் கழிவுகள் குறையும் என்பது தானே உடலியல். அதற்கு மாறாக வெளியேற்றப்பட்ட கழிவுகளைக் கொண்டு உடலில் இருக்கும் கழிவுகளை அளவிட முடியுமா?

சரி. அப்படியானால் இந்தக் கழிவுகளை டெஸ்ட் செய்து முடிவுகளை எப்படி சொல்லலாம்? ஒருவருக்கு சிறுநீரில் மஞ்சள் காமாலை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்படி என்றால் சிறுநீரில் பித்தம் வெளியேற்றப்பட்டு இருக்கிறது என்று பொருள். எங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது? ரத்தத்தில் அளவிற்கு அதிகமாக கலந்து விட்ட பித்தத்தை சிறுநீரகம் அடையாளம் கண்டு வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரில் பித்தம் வெளியாகிற போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. நம் சிறுநீரகம் மிகச்சரியாக இருக்கிறது. அது சரியாக இருப்பதால் தான் கழிவுகளை உள்ளிருந்து பிரித்து அனுப்புகிறது.

2. ரத்தத்தில் இருக்கும் பித்தம் சிறுநீர் வழியாக வெளியேறத்துவங்கி விட்டது. அதாவது உடல் தன் கழிவு நீக்க வேலையைத் துவங்கி விட்டது. அது விரைவில் முழுமையாக வெளியேற்றிவிடும்.

3. அப்படி சிறுநீரின் மூலம் வெளியேறினால் தான் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

4. எந்த அளவு சிறுநீரில் உள்ள பித்தம் அதிகமாகிறதோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் ரத்தத்தில் உள்ள பித்தம்தான் நீரின் வழியாக வெளியேறுகிறது. அது விரைவில் வெளியேறினால் ரத்தம் சுத்திகரிப்படையும்.

5. இவ்வாறு நம் கழிவு நீக்க உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றத் துவங்கி விட்டால் நாம் குணமாகி வருகிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு எதிர்ப்பு சக்தியைப்பெற்று இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.


மேற்கண்ட உதாரணம் மஞ்சள் காமாலை டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல. கழிவுகளில் செய்யப்படும் அனைத்து டெஸ்ட்டுகளுக்கும் பொருந்தும். உலகில் இதுவரை எந்த ஆய்வுக்கூடமாவது ஆய்வு முடிவுகளைப் பார்த்து உங்கள் உடல் நன்மை செய்துகொண்டு இருக்கிறது என்றோ, அல்லது எவ்வளவு கழிவு வெளியேறுகிறதோ அவ்வளவு நல்லது என்றோ சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? அப்படி சொன்னால் நமக்கு சிகிச்சை தேவையில்லை. உடலிற்கு துணை நிற்கும் எளிய உணவுகளே போதும் என்று நாம் தெரிந்து கொண்டுவிட்டால் எப்படி வியாபாரம் செய்வது? உலகின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக மருத்துவம் மாற முடியாதே?

நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் செய்யப்படும் எல்லா டெஸ்ட்டுகளும் நம்மை பயமுறுத்தவே உதவி செய்யும். மாறாக உடல்நலனை திரும்பப் பெற உதவாது. கடைசியாக ஒரு தகவல்.

நாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் எந்த பொருளாவது, எந்த சேவையாவது குறைபாடாக இருந்தால் வழக்கு தொடுக்க முடியும். இது அடிப்படை மனித உரிமை. ஆனால் உலகில் எங்காவது ஒரு மருத்துவ ஆய்வுக்கூடத்தின் மேல் வழக்குத் தொடரப்பட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி வழக்குத் தொடர முடியாது. ஏனென்றால் உயிரோடு உள்ள ஒவ்வொரு மனித உடலும் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கும். காலையில் நீங்கள் செய்த டெஸ்ட்டுகள் மாலையில் மாறிவிடலாம். அதுதான் உடலின் இயல்பு என்பது எல்லா மருத்துவ அறிஞர்களுக்கும், மருத்துவ சட்டங்களுக்கும் தெரியும். உங்களையும், என்னையும் போன்ற சராசரி மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியாது.


விஞ்ஞானிகள் தங்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்தும் எலிகளிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தானே..?